வியாழன், 7 ஜூன், 2012


(அமுதம் ஜூன் 2012 ஆசிரியர் உரை)

   சென்ற சில வாரங்களாக நாளிதழ்களை புரட்டினால் பக்கத்திற்கு பக்கம் அரசின் சாதனைகள் முழு பக்க விளம்பரங்களாக இடம்பெற்றிருப்பதை பார்க்க முடிந்தது. அவற்றை பார்க்கும் போதெல்லாம் ‘சாதனை என்ற சொல்லைப் பற்றிய எண்ணம் மனதில் ஓட ஆரம்பித்தது.
   ஒருவர் தான் செய்யும் வேலையையும், கடமையையும் சாதனை என்று கூறிக்கொள்ள முடியாது என்பது என் எண்ணம். ஒரு மருத்துவர் தான் இதுவரை மருத்துவம் பார்த்து குணமடைந்தவர்களின் பட்டியலை வைத்துக் கொண்டு பெருமையடித்துக் கொள்ள கூடாது. காரணம் நோய்க்கு சிகிட்சை அளிப்பது அவர் படித்த படிப்பிற்கான பணி.
   ஒரு சாதனை என்பது காலத்தால் அழியாததாக, வரலாறு பேசும்படியானதாக இருக்க வேண்டும். இது போன்ற விளம்பரங்கள் வருங்கால சந்ததியரிடம் தவறான குறிக்கோளை ஏற்படுத்திவிடுமோ என்பதே என் அச்சம்.
   உலகம் முழுவதும் பல இலட்சம் அல்லது கோடி மருத்துவர்கள் இருக்கலாம். அவர்களைப் பற்றி அதிகம் அறிந்திராத உலகம், அம்மை நோய்க்கு மருந்து கண்டுபிடித்த லூயி பாயிஸ்டரை நினைவில் வைத்துள்ளது. காரணம், அவர் நோய்க்கு மருந்து கண்டுபிடிப்பது அவரது கடமையாக இருக்கவில்லை. யாரும் தூண்டவும் இல்லை. அவராக சொந்த முயற்சியால் இதை செய்தார்.
   எனவே, சிந்தியுங்கள் பெற்றோர்களே, உங்கள் குழந்தைகள் நாளைய வரலாறாக வேண்டுமா?  அல்லது காலத்தால் மறக்கப்படும் ஒரு சாதாரண தொழிலாளி ஆக வேண்டுமா. (அதாவது மருத்துவர், பொறியாளர், அரசு ஊழியர் என பல பணிநிலைகளில்).
   முயன்று உழைத்தால் சாதனைகள் படைக்க இந்தியாவில் அத்தனை துறைகளும் சாதனையாளர்களை எதிர்பார்த்துக் காத்துக் கிடக்கிறது. எனவே முயல்வோம் சாதிப்போம். நன்றி...


(      சாதனை புரிய பிள்ளையை, உடன்பிறப்பை, நண்பர்களை எப்போதாவது எல்லோரும் தூண்டி இருப்போம், அல்லது தூண்டிக் கொண்டிருப்போம். அத்தகைய சூழ்நிலையில் பத்திரிகைகளில் வெளிவரும் மேற்கூரிய விளம்பரங்கள் எது சாதனை என்பதில் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது. குழம்பிபோகும் பிள்ளைகளும், பெற்றோரும் உப்புக்கும் உதவாத செயல்களை சாதனை என கூறித்திரிகின்றனர். இதுபோன்ற நிகழ்வுகளை மனதில் கொண்டே மேற்கண்ட ஆசிரியருரையை எழுதினேன்.    )

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக